Friday 28 June 2013

டாக்டருக்குப் படிப்பது போல வக்கீலுக்குப் படிப்பதுபோல பெற்றோருக்கும் படிக்க வேண்டும்

ஒருமுறை ஏழாம் வகுப்பில் படிக்கின்ற என் மகள் ஒரு வீட்டுப்பாடத்துடன் வந்தாள்.  மழைக்காடுகள் பற்றி  ஆங்கில மொழியில் அவள் ஒரு புத்தகம் தயாரிக்க வேண்டும்.  அவள் பாடம் படிக்கும் மொழியோ ஜேர்மன் மொழி.  அவள் இணையத்தில் தேவையான தரவுகள் திரட்ட வேண்டு.  பின்பு பொருத்தமான படங்களை அச்சுப்பிரதி எடுக்க வேண்டும்.  பின்பு ஜேர்மன் மொழியில் எடுத்த குறிப்புக்களை ஆங்கில மொழிக்கு மாற்ற வேண்டும்.  பின்பு அவற்றைஎல்லாம் ஒரு புத்தக வடிவில் தயாரிக்க வேண்டும்.  இவ்வளவும் செய்வதற்க்கு என்னுடைய உதவி அவளுக்கு மிகவும் தேவைப்பட்டது. அந்த நேரம் பார்த்து மடி கணணி இணையத்தை இழுத்துத் தர மாட்டேன் என்று தொந்தரவு செய்தது.  ஒருவாரு அதைச் சரி செய்ய printer அச்சுப்பிரதி எடுத்துத்த்தர மாட்டேன் என்று அடம் பிடித்தது.  ஒருவாறு printerரைத் திருத்தி எடுத்து தேவையான படங்களைப் பெற்றுக்கொண்டபின் அவள் ஜேர்மன் மொழியில் தொகுத்திருந்த குறிப்புக்களை ஆங்கில மொழிக்கு மாற்ற வேண்டி இருந்தது.  இவ்வளவு வேலையும் முடிய இரவு 12 மணியாகிவிட்டது.  இதற்குப் பின்பும் அந்தச் சின்னப் பெண்ணால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  அம்மா நீங்களே புத்தகமாகக் கட்டிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு நித்திரைக்குச் சென்றுவிட்டாள்.

இதுவாவது சற்றுச் சிரமம் குறைந்த வேலை.  பிறிதொரு நாளில் இன்னுமொரு வீட்டுப் பாடத்துடன் வந்தாள்.  அவள் உயிரியல் படிக்க ஆரம்பித்த நேரம் அது.  மனித முள்ளந்தண்டு போன்ற மாதிரி ஒன்று தயாரிக்க வேண்டும்.  இம்முறை நான் தப்பித்தேன்.  மாட்டிக் கொண்டது அவள் அப்பா தான்.  தேவையான மூலப் பொருட்களை எங்கு வாங்குவது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.  ஆனாலும் செல்ல மகள் கேட்டு விட்டாளே.  கடைகடையாக ஏறி இறங்கி ஒரு மாதிரியாகத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தார்.  வழக்கம் போலவே ஒரு எல்லைக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மகள் போய்ப் படுத்து விட்டாள். தகப்பனார் தன்னுடைய வேலை முடிக்க இரவு ஒரு மணியாகி விட்டது.  இதோ அவர் செய்த மாதிரி முள்ளந்தண்டு.
அப்பப்பா! ஒரு பதின் மூன்று வயது பள்ளிப் பிள்ளைக்குப் பெற்றோராக இருக்க எவ்வளவு தகமைகளையும் திறமைகளையும் கொண்டிருக்க வேண்டியிருக்கின்றது.  எமக்கு முடிந்த்த திறமைகள் கையளவுதான்.  இன்னும் முடியாத திறமைகள் கடலளவு இருக்கின்றனவே.

இன்று நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது எனக்குத் தாயகத்திலேயே தெரிந்த பெண் ஒருவர் இங்கு புலத்திலே வாழ்கின்றார்.  தொலைபேசியில் பேசும் போது எல்லாம் தனக்கு விதம் விதமான தாயக உணவுகள் சமைக்கத் தெரியும் என்று பெருமையாகச் சொல்லுவார்.  எல்லாம் இங்கு வந்து பழகியதுதானாம்.  அது மட்டும் அல்லாது தன் பிள்ளைகளிற்க்கு விதம் விதமான தாயகப் பட்டாடைகள் அணிவித்து விழாக்களிற்க்கு அழைத்துச் செல்வார்.  அவருடைய கதைகளைக் கேட்கும் போது எனக்குச் சற்றே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும்.  ஏனன்றால் புலத்திலே இருந்து கொண்டு தாயக வாழ்வு வாழ என்னால் முடியவில்லை.  அது என்னுடைய திறமைக்குறைவு என்றே நான் கருதுகின்றேன்.

ஒருமுறை அந்தப் பெண் முகப் புத்தகத்திலே (face book) தன் பிள்ளைகளின் அழகான படங்களை இணைத்திருந்தார்.  கண்ட மாத்திரத்திலே எனக்கு அவரின் அழகான சிறுமிப் பருவம் நினைவுக்கு வந்தது.  உடனே, “நீங்கள் உங்கள் அம்மா போல அழகாக இருக்கிறீர்கள்”, என்று அந்தச் சிறுமிகளை விழித்து ஜேர்மன் மொழியிலே எழுதியிருந்தேன்.  இரண்டு நாட்கள் கழித்து அந்த்தப் பெண் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  “ நீங்கள் என்னைக் “குண்டு” என்று முகப் புத்தகத்திலே குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என்று சற்றே மனஸ்தாபத்துடன் கூறினார்.  நான்,” இல்லையே, அழகு என்றல்லவா குறிப்பிட்டிருக்கின்றேன்,” என்று கூறினேன்.  உண்மையில் நடந்த்தது என்ன?  நான் எழுத்திய மிகச் சிறிய யேர்மன் மொழிமூல வசனம் அவருக்குப் புரியவில்லை.உடனேயே எனக்குள் இருக்கின்ற சிறுவர் பராமரிப்பாளர் விளித்துக் கொண்டார்.

ஒவ்வொருவருக்கும் 24 மணிநேரங்கள் தானே கொடுக்கப்பட்டிருக்கின்றது.  எனக்கும் அந்த 24 மணினேரங்கள் தான்.  ஒரு அம்மாவாக எனக்குக் கிடைத்த நேரத்தில் வேலை நேரம் போக மீதி நேரத்தில் அம்மாவுக்கான திறமைகளை (parenting skill) வளர்த்துக் கொள்ளத்தான் சரியாக இருக்கின்றது.  பலகாரம் சுடுத்தல், நண்பர் வீட்டுக் கொண்டாட்டத்திற்கு தேவையான பலகாரங்களைப் பொறுப்பெடுத்துச் செய்தல்.  என்பன எனக்கு முடியவே இல்லை.  எனக்குக் கிடைத்த 24 மணிநேரம் தானே மற்றப் பெண்களுக்கும் கிடைக்கின்றது.  அவர்களுக்கு மட்டும் எப்படி இது எல்லாம் சாத்தியம் என்று வியந்திருக்கின்றேன்.  சத்தியமாகச் சொல்கின்றேன்.  இவற்றிற்கெல்லாம் நான் எதிரியில்லை.  இது எப்படிச் சாத்தியமாகின்றது என்ற கேள்விதான் மனதில் எஞ்சிநிற்கின்றது.  மனத்தில் ஒரு சந்தேகமும் வந்து நிற்கின்றது.  ஒருவேளை இவர்கள் எல்லாம் அம்மாப்படிப்புப் படிக்கவேண்டிய நேரத்தைத் தான் சூறையாடுகின்ரார்களோ என்று எண்ணிக்கொள்வேன்.

இந்த்தப் பெண்ணின் விடயத்திற்க்குப் பிறகு என்னுடைய சந்த்தேகம் முற்றாக வலுப்பெற்று விட்டது.  உண்மைதான்.  எமக்கென்று கொடுக்கப்பட்ட 24மணி நேரத்தில் எம்முடைய வேலை நேரம் போக மீதி நேரத்தில் நாம் எம் பிள்ளைகளுக்கு உதவக்கூடிய திறன்களை வளர்ப்பதில்தானே அக்கறை காட்ட வேண்டும்.  அது எம் பிள்ளைகளுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்.
.

3 comments:

  1. பிள்ளைகளுக்கு உதவக்கூடிய திறன்களை வளர்ப்பதில்தானே அக்கறை காட்ட வேண்டும்.
    >>
    மிகச்சரியான கருத்து.., அப்படி கற்க போய்தான் நிறைய ஆங்கில வார்த்தைகளும், கண்னி அறிவும் எனக்கு கிடைத்தது. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நான் கூட அப்படித்தான் சகோதரி. ஆறு வருடங்களுக்கு முன் கணிணி வீட்டுக்கு வந்தபோது கூட சரியாகப் பிடிக்கத் தெரியவில்லை எனக்கு. இப்போ பிள்ளைகளுக்கு உதவக் கூடிய விததில் அதிகம் திறன்களையும் மொழி அறிவையும் வளர்த்தாயிற்று.

      Delete
  2. வணக்கம் சொந்தமே!வரைச்சரத்தில் தங்கள் அறிடமுகம் கிடைத்தது.இதைப்படிக்கையில் என் அம்மாவை நினைத்துக்கொள்கிறேன்.இப்படியாய் தான் எங்களை அம்மா அரங்கேற்றினார்....வாழ்த்துக்கள் சொந்தமே!

    ReplyDelete